Tuesday 25 February 2014

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா நிறைவு

இந்த மாதம் 15ஆம் தேதி துவங்கிய 22ஆவது உலகப் புத்தகத் திருவிழா 23ஆம் தேதி முடிவடைந்தது. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இந்தத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. உள்நாட்டிலிருந்தும், சுமார் 25 வெளி நாடுகளிலிருந்தும் 1100க்கும் அதிகமான நிறுவனங்கள் திருவிழாவில் கலந்து கொண்டன.



2012 வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்த புத்தகத் திருவிழா, இப்போது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இது ஒரு வகையில் சாதகமாகவும் அமைந்தது, ஒருவகையில் பாதகமாகவும் அமைந்தது என்று கூறலாம். இந்தியப் பதிப்புத் துறையின் மையமாக இருக்கிற தில்லிப் பதிப்பாளர்களுக்கு இது சாதகமான விஷயம். தமிழ்நாடு போன்ற தொலைதூர மாநிலங்களின் பதிப்பாளர்களுக்கு இது கொஞ்சம் சோதனையான விஷயம். ஆங்கிலம், இந்தி தவிர்த்து பிறமொழிப் பதிப்பாளர்கள் பொதுவாகவே குறைவான எண்ணிக்கையில்தான் கலந்து கொள்வார்கள். புத்தகங்களைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு, வருகிற ஆட்களுக்கான தங்குமிடச் செலவு, உணவுச்செலவு, வாடகை எல்லாம் போக, ஏதும் மிஞ்சுமா என்பதே சந்தேகம். இந்தச் சூழலில், ஆண்டுதோறும் திருவிழா எனும்போது, மிகச்சில நூல்களே வெளிக்கொணரும் சிறு பதிப்பாளர்களும் பிராந்திய மொழிப் பதிப்பாளர்களும் பங்கேற்பது சிரமமாகி விடுகிறது.
 
தமிழ்நூல்களை வாங்கும் இலங்கைத் தமிழர்கள்
இருப்பினும், இந்தப் புத்தகத் திருவிழாவில் தென்மாநிலங்களிருந்து கலந்து கொண்ட பதிப்பாளர்களைப் பார்க்கும்போது, தமிழத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் கணிசமான பதிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து தலா ஒவ்வொரு நிறுவனம் மட்டுமே கலந்து கொண்டன. தமிழிலிருந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட், ஓங்காரம், பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், செம்பருத்தி ஆகிய பதிப்பகங்கள் பங்கேற்றன. முதல்முறையாக சென்னையிலிருந்து பதிப்பாளர் விற்பனையாளர் சங்கமாகிய பபாசியும் பல பதிப்பகங்களின் நூல்களைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது. இவை தவிர, இந்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட், மற்றும் சாகித்ய அகாதமி ஆகிய நிறுவனங்களும் தமது கடைகளில் அனைத்துமொழி நூல்களையும் விற்பனைக்கு வைத்திருந்தன. (மக்கள் எந்த அளவுக்கு இவற்றில் வாங்கினார்கள் என்பது கேள்விக்குறிதான்.)

இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவில் போலந்து சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்றது. போலிஷ் எழுத்தாளர்கள் பலர் பங்கேற்றனர். போலந்து இலக்கியம் பற்றிய உரையாடல்கள், இந்தி மொழியாக்க நூல் வெளியீடுகள் போன்றவை இதுவரை இந்தியாவில் அதிகம் அறியப்படாத போலந்து இலக்கியத்தை அறிமுகம் செய்வதற்கான அஸ்திவாரமாக அமைந்தன.

கடந்த ஆண்டு அறிமுகமான நியூ டெல்லி ரைட்ஸ் டேபிள் இந்த ஆண்டும் நடைபெற்றது. அதாவது, பதிப்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், நூல்களுக்கான காப்புரிமைகளை விற்பது அல்லது வாங்குவதற்காக நேருக்கு நேர் அமர்ந்து உரையாடுவதற்கான ஏற்பாடுதான் ரைட்ஸ் டேபிள். மேலை நாடுகளின் புத்தகத் திருவிழாக்களில் இவை வழக்கமாக இருந்தன. இப்போது தில்லியிலும் அறிமுகமாகி, விரைவில் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிலும் இது அறிமுகமாக இருக்கிறது.


குழந்தைகள் இலக்கியம்தான் இந்த ஆண்டுத் திருவிழாவின் மையக் கருத்து என்பதால் குழந்தைகளை மையப்படுத்திய பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குழந்தை இலக்கியம் பற்றிய கலந்துரையாடல்கள், பயிற்சிப்பட்டறைகள், ரஸ்கின் பாண்ட் போன்ற பிரபல எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் போன்றவை பெரும் வரவேற்புப் பெற்றன.



திருவிழாவுக்கு வருவோரை மகிழ்விக்க தினமும் மாலை வேலைகளில் பழங்குடி மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை சங்கீத நாடக அகாதமி மற்றும் சாகித்ய கலா பரிசத் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் முதல் மேற்கே குஜராத் வரை, வடக்கே லேப்சா சமூகத்தினர் முதல் தெற்கே கேரளத்தின் களரிப்பயற்று வரை பலவிதமான கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.



வருகை தந்த பிரமுகர்களில் சிலர் – அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, கரன் சிங், மனீஷ் சிசோடியா, அமைச்சர் பல்லம் ராஜு, கவிஞர் சத்தியானந்தம், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசின்ஹ, மற்றும் பலர். எழுத்தாளர் சந்திப்புகளில் கலந்து கொண்ட பட்டியல் நீ........ளமானது.

அடுத்த புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 முதல் 22 வரை என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு நான் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகள் விரைவில் பகிர்வேன். வாங்கிய நூல்களின் பட்டியலும் விரைவில்.

வாசிப்பை நேசிப்போம்.

Saturday 22 February 2014

உலகப் புத்தகத் திருவிழா 2014

தமிழ் நூல்கள்

நேற்று ஒரு கட்டுரை எழுத அரங்குகளைச் சுற்றிவந்தபோது 18ஆம் அரங்கில் நேஷனல் புக் டிரஸ்ட் கடையையும் பார்த்தேன். அங்கிருந்த அதிகாரி, என் நண்பர், தமது கடையில் தமிழ் நூல்களை யாருமே வாங்கவில்லை, நண்பர்களுக்குத் தெரிவித்து வரச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.


இன்னும் இரண்டு நாட்கள்தான் உண்டு. திருவிழாவுக்கு வரும் தில்லித் தமிழ் புத்தக ஆர்வலர்கள் 14ஆம் அரங்கில் தமிழ் கடைகளைப் பார்வையிடுவதோடு 18ஆம் அரங்கில் என்பிடி கடையையும் பார்வையிடவும். 11ஆம் அரங்கில் சாகித்ய அகாதமி கடையையும் பார்வையிடலாம், அங்கும் சில தமிழ் நூல்கள் உண்டு.

ஆங்கிலத்தில் மலிவான நூல்கள்


அரங்கம் 1R மற்ற அரங்குகளிலிருந்து தனித்திருப்பதால் பாவம் கவனிக்கப்படாமல் இருக்கிறது. இங்கே சில கடைகளில் மிக மலிவான விலையில் ஆங்கில நூல்கள் உண்டு. இளைய தலைமுறையினர் இங்கிருந்து அள்ளிச் செல்கின்றனர்.

கேலிச்சித்திரப் புகழ் சங்கர்

உலகப் புத்தகத் திருவிழாவில், 7ஆம் எண் அரங்கில் கதாசாகரா என்றொரு பகுதி இருக்கிறது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் மையக்கருத்து குழந்தை இலக்கியம் என்பதால் குழந்தை இலக்கியம் பற்றிய சிறப்புப் பகுதி அது. அதில் ஒரு பகுதி, சங்கருக்கு அஞ்சலி. யார் இந்த சங்கர்?


கேலிச்சித்திரம் என்றாலே நமக்கு ஆர்.கே. லட்சுமணன் பெயர்தான் நினைவு வரும். கேசவ சங்கர பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் உருவாக்கியதுதான் சில்டிரன்ஸ் புக் டிரஸ்ட் (Children’s Book Trust - CBT). இதை அரசு நிறுவனம் என்று சிலர் நினைத்து விடுகிறார்கள். சிபிடி, குழந்தைகளுக்கான தரமான நூல்களை பல மொழிகளிலும் ஏராளமாக வெளியிட்டு வருகிறது. தில்லியில் இருக்கிற புகழ்பெற்ற பொம்மைகள் அருங்காட்சியகமும் (Dolls Museum) அவர் நிறுவியதே.



ஏராளமான விருதுகள் பெற்ற சங்கர் ஏராளமான நூல்களுக்கு சித்திரங்கள் வரைந்திருக்கிறார். பல்லாயிரம் கார்ட்டூன்களும் வரைந்திருக்கிறார். நேருவைப் பற்றி மட்டும் 1500 கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். தன்னையே கேலி செய்யும் அந்தச் சித்திரங்களை நேருவே ரசித்துப் பார்ப்பாராம். சங்கருடைய கேலிச்சித்திர நூல் ஒன்றின் தொகுப்பும் அங்கு உண்டு. வாங்குவதற்கு சிபிடி கடைக்குப் போக விருப்பம் இல்லாதவர்கள் அந்த நூலைப் பார்வையிடலாம். வரலாறு கண்முன் விரியும்.

வாசிப்பை நேசிப்போம்

Friday 21 February 2014

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா 2014

பிப்ரவரி 15 அன்று புதுதில்லி பிரகதி மைதானில் 22ஆவது உலகப் புத்தகத் திருவிழாவைத் துவக்கி வைத்தார் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி. 


சுதந்திர, ஜனநாயக, பன்மொழிகளின், பல பண்பாடுகளின் மற்றும் மதச்சார்பற்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகத் திருவிழா என்றார் பிரணாப் முகர்ஜி. இணையமும் காட்சி ஊடகமும் வாசிக்கும் பழக்கத்தை சீரழித்து விடும் என்ற கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப்பற்றிப் பேசிய அவர், வாசிக்குப் பழக்கம் என்பது மனித சமூகத்தின் அங்கமாகி விட்டது, எனவே புத்தகங்கள் நிலைத்து நிற்கும் என்றார்.


இந்தத் திருவிழாவின் சிறப்பு விருந்தினர் நாடாக இருக்கிறது போலந்து. போலந்திருந்து இதற்காக சிறப்புக்குழு வந்திருக்கிறது. போலந்தின் அமைச்சர் திருமதி கதார்ஸைனா, இரண்டாம் உலகப் போரின்போது போலந்தின் அகதிகளுக்கு இந்தியா தஞ்சம் அளித்ததை நினைவுகூர்ந்து நன்றி கூறினார். சுமார் 20000 போலந்து மக்களுக்கு நவநகர் சமஸ்தானத்தின் மன்னர் ஜாம் சாகேப் திக்விஜய் சிங் தஞ்சம் அளித்தார் என்பது வரலாறு. இந்தியாவைப் பற்றி போலந்துவாசிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் போலந்து இலக்கியம் இந்தியர்கள் மத்தியில் அதிகம் அறியப்படவில்லை என்றார் போலந்தின் மற்றொரு அமைச்சர் திருமதி மல்கோர்ஸடா.


இந்தப் புத்தகத் திருவிழாவின் மையக் கருத்தாக இருப்பது குழந்தை இலக்கியம். இதற்காக தனி அரங்கம் உண்டு. 13 மொழிகளில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் விவரங்கள் அடங்கிய நூல் பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது.

குழந்தைகளை மையப்படுத்திய பல நிகழ்ச்சிகளும் - பொழுதுபோக்கு மற்று்ம் அறிவுசார் நிகழ்ச்சிகள் - காலை முதல் மாலை வரை நடைபெறுகின்றன. 

ஒரு நாளில் கருத்தரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள், மாநாடுகள், கவியரங்குகள், புத்தக வெளியீடுகள் என சுமார் 60 நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. 

திருவிழா விவரம் –
15ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை 
11 மணி முதல் 8 மணி வரை. 
நுழைவுக் கட்டணம் - சிறுவர்களுக்கு ரூ. 10, பெரியவர்களுக்கு ரூ. 20.
நுழைவுச் சீட்டுகள் சில மெட்ரோ நிலையங்களிலும் கிடைக்கும்.




தமிழ்ப் பதிப்பாளர்கள் 14ஆம் எண் அரங்கம்
1. இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் - கடை எண் 90
2. ஓங்காரம் பப்ளிகேஷன்ஸ் - கடை எண் 91
3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - கடை எண் 92
4. கிழக்கு பதிப்பகம் - கடை எண் 93
5. காலச்சுவடு பதிப்பகம் - கடை எண் 94
6. தமிழக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் (BAPASI) – 75
7. செம்பருத்தி - S1/5 (BAPASI கடை எதிரில்)
8. பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் 73
9. Tutorush - S2/5

10. சாகித்ய அகாதமி சில தமிழ் நூல்களை வைத்திருக்கிறது. அரங்கம் 11, கடை எண் 122

11. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா கடையிலும் தமிழ் நூல்கள் கிடைக்கும். அரங்கம் 18 - கடை எண் 44

வாசிப்பை நேசிப்போம்.