Monday 31 August 2015

இரயில் பயணங்களில் (2015) - 1

ரயில்கள் வேறாக இருக்கலாம், பயணிகளும் வேறாக இருக்கலாம், பாதைகளும் வேறாக இருக்கலாம். எல்லாம் நம் பார்வையில் மட்டுமே. மற்றபடி எல்லா ரயில்களும் பயணிகளும் பாதைகளும் ஒன்று போலவே தோன்றுகிறது. ஒவ்வொருவரையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனோ என்று எனக்குத் தோன்றுவது போலவே மற்றவர்களுக்கும் தோன்றக்கூடும்

இந்த ரயிலின் கழிப்பறையிலும் யாரோ ஒருவன் ................... நான் உன்னை ................... என்று எழுதி வைத்திருக்கிறான். வேறு யாரோ ஒருவன் தண்ணீர் பாட்டிலை மற்றவர்களும் பயன்படுத்தட்டும் என்று விட்டுச் சென்றிருக்கிறான்.

இரவு முழுவதும் பாட்டுக்கேட்டோ, கேம் விளையாடியோ, பேஸ்புக் பார்த்தோ செல்போன் பேட்டரிகளைக் காலி செய்து விட்டவர்கள் அதிகாலையிலேயே ப்ளக் பாயின்ட் இருக்கும் இடத்தில் வரிசையில் நிற்கிறார்கள். அங்கும் யாரோ ஒரு புண்ணியவான் அலயஸ் புத்திசாலி த்ரீ-வே பின் மாட்டி, மற்றொருவன் அதற்கும் மேலே மற்றொரு த்ரீ-வே பின் மாட்டி, ஒரு பிளக் பாயின்ட்டில் ஐந்து போன்களுக்கு சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தையும்கூட வீணடிக்க முடியாத ஒரு கடமைவீரன் ஏதோ நோண்டிக்கொண்டிருக்கிறான். ஒருவேளை காலை வணக்கம் போட்டுக் கொண்டிருக்கலாம், அல்லது காலை வணக்கங்களுக்கு பதில் வணக்கமாக இருக்கலாம்.

சாய்.... கர்மாகரம் சாய்.... என்று வரிசையாக வந்து கொண்டே இருக்கிறார்கள். அத்தனை பேரும் ஏழு ரூபாய் டீக்கு பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சலனமே இல்லாமல் நழுவுகிறவர்களாகவே இருக்கிறார்கள். வேண்டுமென்றே அவனை சற்றே விட்டுவிட்டு, ஹலோ பாக்கி எங்கே என்று கேட்டால், பாக்கெட்டில் இருக்கிற மொத்தக்காசையும் தேடுவதுபோல நடித்துவிட்டு குல்லா நஹீ ஹை சாப்... வாபஸ் மே தே தூங்கா - சில்லறை இல்லை சார். திரும்பி வரும்போது தந்துடுவேன் என்று போய்க்கொண்டே இருக்கிறான். இதுவரை எனக்காக மட்டும் மூன்று பேர் திரும்பி வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறார்கள். எல்லாருமே திரும்பி வரத்தான் போகிறார்கள், யாரும் காசு தரப்போவதில்லை என்பது நிச்சயம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்று ரூபாய்க்கு இரண்டு பிஸ்கட்கள் வைத்த ஒரு சின்ன பாக்கெட் கொடுப்பார்கள். இப்போது ரொம்பவே புத்திசாலிகளாகி விட்டார்கள்.

வேறொரு பெட்டியில் இருக்கை இருந்தும் தெரிந்தவர் இருக்கிறார் என்பதற்காக எங்கள் வரிசையில் வந்து உட்கார்ந்து விட்டான் ஒருவன். இரண்டு வரிசைகளுக்கு அப்பால் ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருக்கிறது. டீ-பேக் போடாத பாலை மட்டும் வாங்கிய அம்மா குழந்தைக்கான புட்டிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கலாம். அப்பா தூங்கிக் கொண்டிருக்கலாம். அல்லது அம்மா தூங்கிக் கொண்டிருக்க, அப்பா திணறிக்கொண்டிருக்கலாம்.

சன்னல்வழிக் காட்சி இதமாக இருக்கிறது. எல்லா நிலங்களும் பச்சையாடை உடுத்தியிருக்கின்றன. வெளிர் பச்சை, இலைப்பச்சை, கிளிப்பச்சை, அடர்பச்சை.... அரசுப்பள்ளிகளின் மாணவர்களின் சீருடையில் தெரியும் பேதங்களை நினைவுபடுத்துகிறாள் நிலமென்னும் நல்லாள். பருவ மழை இன்னும் முடியவில்லை. பாதையோரப் பள்ளங்கள் எல்லாம் நீர் நிரம்பியிருக்க, நீர்க்கோழிகள் நீச்சலடித்துக்கொண்டிருக்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு முந்தைய பயணத்தில் உடுத்த ஒற்றை இலைகூட இல்லாமல் அம்மணமாக நின்றிருந்த மரங்கள் எல்லாம் மழைத்தாய் புண்ணியத்தில் புத்தாடைகளுடன் சிலிர்த்திருக்கின்றன. புத்தாடையைக் காட்டத் துடிக்கும் குழந்தைகளைப்போல ரயிலை நோக்கிக் கொண்டிருக்கின்றன. பல லட்சம் பேருக்குக் காட்டியிருந்தாலும் இன்னும் பார் பார் என்று அழைத்துக்கொண்டிருக்கின்றன.

காலை ஒளியில் வாய்க்கால்கள் வெள்ளி ஓடைகளாய் மின்னுகின்றன. காட்டாறுகள் செம்புலப்பெயல்நீராய்.....

பார்த்துக்கொண்டே இருக்கிறேன். பயணித்துக்கொண்டே இருக்கிறேன்.

Saturday 29 August 2015

ரக்ஷா பந்தன்



ரக்ஷா என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் பிணைப்பு அல்லது கட்டு. சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையிலான அன்பைக் கொண்டாடும் பண்டிகை இது. இந்தியாவின் வட பகுதியில்தான் பிரதானம் என்றாலும் இப்போது தெற்கிலும் பரவி வருகிறது. மொரிஷீயஸ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் ஆகியோர் கொண்டாடுகின்றனர்.

இப்போதெல்லாம் மத சம்பிரதாயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு இதர சமூகத்தினரும் கொண்டாடுவதுண்டு. கொண்டாடப் படுகிறவர் சொந்த சகோதரராகவும் இருக்கலாம், சகோதரராக வரித்துக் கொண்டவராகவும் இருக்கலாம். மதம், சாதி, இனம் போன்ற பிரிவினைகளைக் கடந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான புனித உறவை வலுப்படுத்துவதால், சமாதான சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்துக்குமான கருவியாகவும் இது அமைகிறது எனலாம். ரக்ஷா பந்தன் போலவே பாய்-தூஜ் என்றொரு பண்டிகையும் வடக்கே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தில்லியில் பெண்கள் பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அரசு அறிவிப்பதும் உண்டு.

ராக்கி என்பது ஒரு பெண் தானாகவே செய்த சாதாரண நூலாகவும் இருக்கலாம், அலங்காரம் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம், கடைகளில் வாங்கியதாகவும் இருக்கலாம், வைரம் பதித்து தங்கத்தால் செய்த வளையாகவும் இருக்கலாம். அவரவர் தகுதியைப் பொறுத்தது. அதேபோல, சகோதரன் தரும் பரிசும் அவரவர் தகுதியைப் பொறுத்தது. தில்லியில் ராக்கியை முன்னிட்டு தெருக்களெல்லாம் சிறப்புக் கடைகள் முளைக்கும். நகைக்கடைகளில் செல்வந்தர்கள் கூட்டம் குவியும். ராக்கி வாழ்த்து அட்டைகளும் வந்து விட்டன. தொலைவில் இருக்கிறவர்களுக்கு அஞ்சலில் அனுப்பும் வழக்கமும் வந்தாயிற்று. பேஸ்புக்கில் படங்களால் ராக்கி வாழ்த்துச் சொல்லும் வழக்கமும் வந்து விட்டது என்பதை சொல்லத் தேவையில்லை.

இதற்கு ராக்கி பூர்ணிமா அல்லது ராக்கி என்றும் பெயர் உண்டு. ராக்கி என்றால் புனித நூல் என்று பெயர். சரவண மாதத்தின் பவுர்ணமி அன்று கொண்டாடப் படுவதால் ராக்கி பூர்ணிமா. பொதுவாக ராக்கி என்றே வழங்கப்படுகிறது. இந்தப் புனித நூலை சகோதரரின் கையில் கட்டுகிறாள் சகோதரி. அவனுடைய நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி, சகோதரரின் நலனுக்காக வேண்டுகிறாள். சகோதரன் அவளை எந்தச் சூழலிலும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன் என்று உறுதி பூணுகிறான். (நடைமுறையில் அப்படி நடக்கிறதா என்று யாரும் கேட்க மாட்டீர்கள்தானே...)

காலப்போக்கில் இது நாடுகளுக்கு இடையிலான நட்புமுறை உறவுகளுக்காகவும், மோதல்களைத் தவிர்ப்பதற்காகவும் பயன்படுத்தப் பட்டதாக கதைகள் உண்டு. ரக்ஷா பந்தன் குறித்து நிறைய புனை கதைகளும் உண்டு. எது கற்பனை, எது வரலாறு என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு மக்களிடையே நம்பிக்கை பரவிவிட்டது என்பதும் உண்மை. எனவே, சில சுவையான கதைகளை மட்டும் பார்ப்போம்.

ராக்கி கட்டி, ஆரத்தி எடுத்து, திலகமிட்டு, இனிப்பு வழங்கி, பரிசு வாங்குவது வழக்கம். பிரார்த்தனை செய்யும் வழக்கம் எல்லாரும் செய்வதாகச் சொல்ல முடியாது. கண்ணனின் கையில் யசோதை ராக்கி கட்டிய பிறகு பாடும் பாடல் விஷ்ணு புராணத்தில் இருக்கிறது.

பவிஷ்ய புராணம் - அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கடும்போர் மூண்டது. அசுரர் கை ஓங்கியது. வருண பகவான் இந்திரன் கலங்கிப்போனான். பிருஹஸ்பதியிடம் ஆலோசனை கேட்டான். அப்போது உடனிருந்த இந்திரனின் மனைவி இந்திராணி விஷ்ணுவிடம் ஆலோசனை கேட்க, விஷ்ணு அவளிடம் ஒரு புனித நூலைக் கொடுத்தார். அதை இந்திரனின் கையில் கட்டினாள். இந்திரன் போரில் வெற்றி பெற்றான். இது நடந்த்து சரவண மாதத்தின் பவுர்ணமி நாளில். (இந்தக் கதையில், ராக்கி கயிறு என்பது சகோதரர்களுக்கு மட்டும் கட்டுவதல்ல என்று தெரிகிறது.)

பாகவத புராணம், விஷ்ணு புராணம் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரில் தேவர்கள் வென்றனர். மூவுலகையும் வென்றார் விஷ்ணு. தோல்வி கண்ட அசுரர்களின் மன்ன்ன் பலி, கடும் தவம் புரிந்து, விஷ்ணு எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். விஷ்ணுவின் மனைவி லட்சுமிக்கு இது பிடிக்கவில்லை. தாம் இருவரும் மீண்டும் வைகுண்டம் போக வேண்டும் என்றே விரும்பினாள். எனவே, அவள் பலியிடம் சென்று, ராக்கி கட்டி, சகோதரன் ஆக்கிக் கொண்டாள். பதிலுக்கு என்ன பரிசு வேண்டும் என்று பலி கேட்டான். கூடவே இருப்பேன் என்று விஷ்ணு அளித்த வாக்குறுதியைத் திருப்பித்தர வேண்டும் என்றாள் லட்சுமி. அவளை சகோதரியாய் ஏற்றுக்கொண்ட பலி ஒப்புக்கொண்டான்.

கணேசனுக்கு இரண்டு மகன்கள் சுபம், லாபம். ரக்ஷா பந்தன் தினத்தன்று, கணேசனின் தங்கை அவனுக்கு ராக்கி கட்டினாள். தமக்கு ராக்கி கட்ட யாரும் இல்லையே, எங்களுக்கு சகோதரி வேண்டும் என்று புதல்வர்கள் கேட்டார்கள். கணேசன் இசையவில்லை. நாரதர் குறுக்கே நுழைந்து, கணேசனுக்கு அறிவுரை கூறினார். கணேசன், தன் மனைவிகள் ரித்தி-சித்தி ஆகியோரின் மூலம் சந்தோஷி மா என்ற மகளைப் பெற்றான். புதல்வர்கள் சந்தோஷி மா திருப்தியின் தேவதை என்ற சகோதரியைப் பெற்றார்கள்.

கிருஷ்ணன் திரௌபதியை தங்கையாக நினைத்தான் கிருஷ்ணன். சிசுபாலனின் தலையைத் துண்டிக்கும்போது கிருஷ்ணனின் கையில் வெட்டுக்காயம் பட்டுவிட்டது. திரௌபதி உடனே தன் புடவையைக் கிழித்து கிருஷ்ணனின் கையில் கட்டுப் போட்டாள். இந்த அன்பில் கட்டுண்ட கிருஷ்ணன், அந்தக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் உரிய பரிசை நேரம் வரும்போது தருவேன் என்றான். திரௌபதிக்கு சோதனை வந்தபோது கிருஷ்ணன் வந்து காப்பாற்றிய கதைதான் எல்லாருக்கும் தெரியுமே...

எமன் 12 ஆண்டுகள் தன் தங்கை யமுனாவைப் பார்க்கச் செல்லவே இல்லை. யமுனை, கங்கையிடம் ஆலோசனை கேட்டாள். கங்கை எமனுக்கு நினைவுபடுத்தினாள். எமன் தங்கையைப் பார்க்க வந்தான். மகிழ்ச்சியில் திளைத்த தங்கை, அண்ணனுக்காக பெரு விருந்து படைத்தாள். என்ன பரிசு வேண்டும் என்றான் அண்ணன். மீண்டும் விரைவிலேயே பார்க்க வர வேண்டும் என்றாள் யமுனை. அன்பில் திளைத்த எமன், யமுனைக்கு என்றும் அழிவில்லை என்று வாழ்த்தினான். வடக்கே அண்ணன்-தங்கை இடையிலான உறவைக் கொண்டாடும் பாய்-தூஜ் என்னும் பண்டிகைக்கு இதுதான் அடிப்படை.

வரலாற்றுப் புனைவுகள்
அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தபோது, மன்னன் போரஸ் மட்டுமே கடும் எதிர்ப்புக் காட்டினான். போரசின் மனைவி, அலெக்சாண்டருக்கு ஒரு புனித நூலை அனுப்பி, தன் கணவனுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடாது என்ற கேட்டுக்கொண்டாள். போரின்போது அலெக்சாண்டரை எதிர்கொண்ட போரஸ் அவன் கையில் ராக்கி இருந்த்தைப் பார்த்து, இது யார் கட்டியது என்று கேட்டான். அவனுடைய மனைவி கட்டியது என்றான் அலெக்சாண்டர். அப்படியானால், அலெக்சாண்டர் தன் மைத்துன்ன் ஆகிறான் என்பதற்காக அவனைக் கொல்லாமல் விடுகிறான்.

இதே கதையை அலெக்சாண்டரின் மனைவி போரசுக்கு ராக்கி கயிறு கட்டி தன் கணவனுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடாது என்று வாக்குறுதி வாங்கியதாகவும், அதனால் அலெக்சாண்டரை போரஸ் கொல்லாமல் விட்டதாகவும்கூட ஒரு திரிபு உண்டு. 


இந்தக் கதையை வைத்து ஹிந்தியில் சிக்கந்தர்-ஏ-ஆஸம் என்ற திரைப்படம் வந்தது. (அலெக்சாண்டர் இந்தியில் சிக்கந்தர் என அழைக்கப்படுகிறார்.) தாரா சிங் அலெக்ஸாண்டராகவும், ப்ரித்விராஜ் கபூர் போரசாகவும் நடித்தனர். அதற்கு முன்னர் 1941இல் வந்த சிக்கந்தர் படத்தில் பிருத்விராஜ் கபூர் அலெக்சாண்டராகவும் சோரப் மோடி போரஸாகவும் நடித்தனர்.

மேலே சொல்லப்பட்ட இரண்டையுமே புனைகதைகள் என்றே சொல்ல வேண்டும். ஜீலம் நதிப் போரில் போரஸை அலெக்சாண்டர் தோற்கடித்து, போரசின் காலாட்படையினர் 20,000 பேரும், குதிரைப்படையினர் 3000 பேரும் மடிந்தனர் என்பதும், இறுதியில் போரசிடமே அரசை ஒப்படைத்துவிட்டு அலெக்சாண்டர் திரும்பினான் என்பதும் வரலாறு.

கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க வரும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

மற்றொரு கதையில், சித்தோர் ராணி கர்ணாவதி முகலாய சக்ரவர்த்தி ஹுமாயூனுக்கு ராக்கி கட்டியதாக வருகிறது. கணவனை இழந்த ராணி கர்ணாவதி, 1535இல் பகதூர் ஷா படையெடுத்தபோது, தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று உணர்ந்தாள். ஹுமாயூனுக்கு ராக்கி அனுப்பினாள். அந்த அன்புக்குக் கட்டுண்ட ஹுமாயூன் தன் படைகளை சித்தோருக்கு அனுப்பினான். ஆனால் அதற்குள் தாமதமாகி விட்டது.

1905இல் பிரிட்டிஷார் வங்கத்தைத் துண்டாட முனைந்தபோது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை எற்படுத்த ரவீந்திரநாத் தாகூர் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இப்போதும் வங்கத்தில் அவர் துவக்கி வைத்த ராக்கி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராக்கி இப்போதெல்லாம் அரசியலிலும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்.

கடைசியாக, ராக்கி குறித்து தாகூர் எழுதிய கவிதை -
The love in my body and heart
For the earth's shadow and light
Has stayed over years.

With its cares and its hope it has thrown
A language of its own
Into blue skies.

It lives in my joys and glooms
In the spring night's buds and blooms
Like a Rakhi-band
On the Future's hand.

தொகுப்பு விக்கிபீடியா மற்றும் பல வலைதளங்கள்

Friday 28 August 2015

மகாத்மா காந்தியின் சிந்தனைகள்




காந்தி மகான், அரசின் வலுமிக்க சக்திக்கு எதிராக அகிம்சை மற்றும் சத்தியத்தின் தூய வலுவை நிறுத்தி வைத்தார்; வெற்றியும் கண்டார். அவர் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்த அகிம்சை, சத்தியம் ஆகியவை ஒன்றும் புதியவையல்ல. மலைகள் எந்த அளவுக்குப் பழமையானவையோ அந்த அளவுக்கு இவையும் பழமையானவை என்கிறார் அவர். அவர் செய்ததெல்லாம் அந்தத் தத்துவத்துக்குப் புதுவாழ்வு கொடுத்ததும் அதனைப் புதுத் தளத்தில் பயன்படுத்தியதும்தான்.

சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், அன்பு, கடவுள் பக்தி, உடைமையின்மை, சுதந்திரம், உண்ணாநோன்பு, பிரார்த்னை, பிரும்மச்சரியம், உழைப்பு, இயந்திரம், கல்வி, பெண்ணுரிமை என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் குறித்து காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன என்பதை இந்நூல் காட்டுகிறது.

இந்த நூலில் மகாத்மா தமது சொந்தச் சொற்களிலேயே பேசுகிறார். அவருக்கும் வாசகருக்கும் இடையே எடுத்துச் சொல்லுவார் யாரும் இல்லை; எவரும் தேவையும் இல்லை. இந்நூலின் அச்சுப் பிரதிகளை காந்தியே பார்வையிட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. காந்தியையும் அவரது சிந்தனைகளையும் அறிந்தோர் இன்னும் சிறப்பாக அவரைப் புரிந்து கொள்ளவும், அறியாதோர் எளிதாக அறியும் வகையிலும் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் புதுவரவு.

*

எனது எழுத்துகளைக் கவனமுடன் பயில்வோருக்கும் அவற்றில் அக்கறை காட்டும் மற்றவருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே: எனது சிந்தனை முரணற்று இருக்கவேண்டும் என்பது பற்றி நான் கவலைப்படவேயில்லை. சத்தியத்தை நாடும் எனது முயற்சியில் நான் எத்தனையோ கருத்துக்களை கைவிட்டு விட்டேன்; புதியன பலவற்றைக் கற்றிருக்கிறேன். வயதில் முதியவனாகி விட்டதால் என் மனத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவோ, எனது வளர்ச்சியானது தசைகளின் தளர்ச்சியினால் நின்றுவிடும் என்றோ நான் நினைக்க வில்லை. எனது அக்கறையெல்லாம், கணத்துக்குக் கணம் நான் கடவுளென நம்பும் சத்தியத்துக்கு நான் கீழ்ப்படியத் தயாராக இருக்கவேண்டும் என்பதுவே. எனவே எனது இரண்டு படைப்பு களில் முன்னுக்குப்பின் முரண்பாடு தெரிந்தால், வாசகர்களுக்கு எனது மதியின் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருப்பின், இரண்டு கருத்துக்களில் காலத்தால் பிற்பட்டதையே அவர்கள் ஏற்றுக் கொளல் நலம்.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

*

இதற்கு முன்னர் நான் பேஸ்புக்கில் பல பதிவுகளில் இந்நூலைப் பற்றி எழுதியிருக்கிறேன். The Mind of Mahatma என்ற தலைப்பில் நவஜீவன் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ஆங்கில நூலின் தமிழாக்கம் இது.
நான் புத்தக வடிவமைப்புத் தொழில் துவங்கியபோது செப்பனிடும் வேலை துவங்கியது. பலமுறை திருத்தியும் பிழைபார்த்தும் நூலாக வெளிவர 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தமிழாக்கம் தம்பி சீனிவாசன், வேங்கடராமன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
என் நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களுக்கும் இதை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்குண்டு.

வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட், 978-81-237-7627-9, ரூ. 460