Thursday 24 March 2016

நால்வரோடு ஐவரானோம்

மக்கள் நலக்கூட்டணியுடன் விஜய்காந்த் தொகுதி உடன்பாடு செய்து கொண்டார். சமூக வலைதளங்கள் கலகலவென்றிருக்கின்றன. (திமுக நண்பர்கள் கலகலத்துப்போயிருக்கிறார்கள்.) இதன் காரணமாக மக்கள் நலக்கூட்டணி மதிப்பிழந்து விட்டது என்பது பலருடைய கருத்து. ஓரளவுக்கு சரிதான். அதிலும் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்த் என்று பார்க்கும்போது எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதற்காக என்ன செய்ய முடியும்? எல்லாமே நாம் விரும்பியபடியே நடக்க வேண்டும் என்றால் ஆகிற காரியமா? கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு நல்லவர் வல்லவர் என்கிறோம். ஆனால் அவரை கோவையில் தோற்கடிக்கவில்லையா நாம்? ஆர்கே நகர் தொகுதியில் மகேந்திரனுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன?


சரி, மக்கள் நலக்கூட்டணியை இப்போது கலாய்ப்பவர்கள் எத்தனை பேர் அதற்கு உறுதியாக வாக்களிப்பதாக இருந்தார்கள்? திமுக-அதிமுகவுக்கு மாற்று என்று உறுதியாக நம்பினார்களா? நிச்சயமாக இல்லை. (இங்கே கலாய்ப்பவர்களின் தாக்கம் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்கிற நிலை இப்போதைக்கு இந்தியாவில் இ்லலை.)

இப்போது மக்கள் நலக்கூட்டணியையும் விஜயகாந்தையும் கலாய்ப்பதில் முன்னிலை வகிப்பவர்கள் திமுகவினர்தான். அவர்களுடைய ஆதங்கம், ஏமாற்றம், விரக்தி, எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியதே. விஜய்காந்த் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, அவர் வருவார் என்று முந்தநாள்கூட கலைஞர் நம்பிக்கையுடன் அறிவித்தார். அரசியலில் களம் கண்ட சாணக்கியர் (!) கலைஞரே விஜயகாந்த் வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தது தப்பில்லையாம். விஜயகாந்த் மோசமானவராக இருந்தாலும் திமுகவுடன் சேர்ந்தால் தப்பில்லையாம், மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால் கூட்டணியே நாறிவிட்டதாம். ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? விஜயகாந்த் கூட்டணி இல்லை என்றால் திமுக அணி தோல்வி காணும் என்ற அச்சம்தானே முதன்மைக் காரணம்...? மாற்றான் தோட்டத்து மல்லிகை நம் பக்கம் வந்தால்தான் மணக்கும்.

தேர்தலும் கூட்டணிகளும் கொள்கைகளால் மட்டுமே முடிவு செய்யப்படுவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். வாக்குகள்தான் முக்கியம். மக்கள் நலக்கூட்டணிக்கும் அதற்கே உரிய தேர்தல் நிர்ப்பந்தங்கள் உண்டு. இன்றைய தேதியில், கடந்த தேர்தல்களின் வாக்குகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்  – முந்தைய தேர்தலைவிட இப்போது வாக்குகள் குறைந்திருந்தாலும் - கணிசமான வாக்குகள் வைத்திருக்கிற தனிக் கட்சி தேதிமுகதான். மக்கள் நலக்கூட்டணியினர் ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறார்களோ இல்லையோ, கணிசமான இடங்களையாவது பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கும் இருக்கிறது. இல்லையேல் ஐந்தாண்டுகளில் கட்சிகளின் இருப்பே கேள்விக்கு உள்ளாகும். எனவே கூட்டணியில் சேர்த்துக்கொண்டார்கள். திமுக எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று துடிக்க உரிமை இருக்கிறது என்றால், மக்கள் நலக்கூட்டணிக்கும் அதேபோல ஆவல் இருக்கக் கூடாதா என்ன? அல்லது கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கக்கூடாதா என்ன?

இப்போது இவ்வளவு கிண்டல் செய்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் தமது கட்சித் தலைமை இறங்கிவந்து விஜய்காந்த்துடன் பேசச் செய்திருக்க வேண்டும். அதிக இடங்களைக் கொடுக்க திமுக முன்வரவில்லை, விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியின் பக்கம் போய் விட்டார். திமுக ஏன் இறங்கி வரவில்லை? தேதிமுக-வுக்கு தன்னைவிட்டால் வேறு நாதியில்லை என்ற தைரியம். அதே நேரத்தில், அதிக இடம் கொடுத்தால், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வருமோ என்ற அச்சம். மக்கள் நலக்கூட்டணியே உருவாகாமல் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை திமுக தவறவிட்டது. எப்போதும்போல ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியே அழைத்து தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டது. இத்தனை காலமும் பயன்தந்த அந்த சூத்திரம் இந்த முறை பயன் தரவில்லை. தான் மட்டுமே – கலைஞர் குடும்பம் மட்டுமே - முழு அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே இதன் காரணம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை?!

எல்லாம் நடந்து முடிந்த கதைகள். இப்போது கூட்டணிகள் இறுதியாகி விட்டன. இனியாவது அதிமுகவின் பி-டீம், பாஜகவின் சி டீம் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருப்பதைவிட்டுவிட்டு, திமுக ஏன் வெற்றிபெற வேண்டும், எப்படி வெற்றி பெறலாம் என்பதில் கவனம் செலுத்தலாம். பன்றிகளின் படங்களைப் போட்டு போட்டோஷாப் பிரச்சாரம் செய்ததுபோல செய்யத்துவங்கினால் அவர்களுக்குத்தான் கெட்ட பெயர். நகைச்சுவைகள், மீம்கள், கிண்டல்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. என்னாலும் சிரிக்க முடிகிறது. ஆனால் இது மட்டும்தான் தேர்தலா? நாம் கவனிக்க வேண்டியதும் அலச வேண்டியதும் இவைமட்டும்தானா? சிரித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாமா...?

தமிழக வாக்காளர்கள் பார்க்க வேண்டியது கூட்டணியில் யார் யார் என்பதை மட்டுமல்ல. தேர்தல் வாக்குறுதிகளாக எதை முன்வைக்கிறார்கள்? குறைந்தபட்ச வேலைத்திட்டம் முன்வைக்கிறார்களா? டாஸ்மாக் சீர்கேட்டை சரி செய்வார்களா? மணல்கொள்ளை, ஏரிகுளங்களின் ஆக்கிரமிப்புகள், காடுகளை வளங்களைக் கொள்ளையடித்தல், நீர்வளத்தை சீர்கெடுத்தல் ஆகிய பிரச்சினைகளில் யார் என்ன சொல்கிறார்கள்?

இப்படி மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள் யார் என்பதைத்தான் வாக்காளர்கள் கவனிக்க வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு, காலம் காலமாக இலவசங்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக ஆக்கியவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது உங்களிடமே பணம் கேட்டு வாக்குக் கேட்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா ? (எனக்கு தமிழகத்தில் வாக்கு இருந்திருந்தால் நிச்சயம் மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் வாக்களித்திருப்பேன்.)

ஒருவேளை மக்கள்நலக்கூட்டணி ஆட்சி அமைந்தால் (!!!) அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். இடதுசாரிகள் நிச்சயமாக கடிவாளமாக இருப்பார்கள் என்று நம்பலாம். அது திமுக-அதிமுக ஆட்சிகளை விட மோசமாகவா இருந்துவிடப்போகிறது? smile emoticon இந்த இரண்டு கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்து வந்தவர்கள், மூன்றாவது தரப்புக்கு ஒரு வாய்ப்பு அளித்துத்தான் பார்க்கலாமே...?

தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று யாரும் கணித்துவிட முடியாது. ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்போம் என்று மதிள்மேல் பூனைகளாக இருப்போர்தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கிறார்கள்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் திமுக-அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இப்போது அதிமுகவின் தலைமையின்கீழ் சர்வாதிகார ஆட்சி என்றால், முந்தைய ஆட்சியில் கலைஞர் குடும்பம் ஆட்டம் போட்டது அதற்குள் மறந்து போய்விட்டதா என்ன? இன்றைய நிலையில் திமுக பெட்டர் என்று நிச்சயம் நானும் சொல்லுவேன்தான். ஆனால் திமுக மட்டும்தான் சிறந்தது என்று திமுககாரர்களே சொல்ல முடியாது. (ஓவரா கிண்டினா பழைய கதையெல்லாம் எடுத்து விட வேண்டியிருக்கும், வேண்டாம்.)


ஒருவேளை திமுக-அதிமுக இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், திமுக கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தால், மக்கள் நலக் கூட்டணிதான் அவர்களுக்கு நேச்சுரல் கூட்டணியாக இருக்க முடியும். அதையும் மனதில் கொள்ளலாம் திமுக நண்பர்கள்.

Tuesday 22 March 2016

இந்தியாவில் நிலத்தடி நீர்வளங்கள்

இப்படியொரு தலைப்பில் ஒரு நூல் 2011இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 2014 இறுதியில், திருத்திய பதிப்புக்காக நூலாசிரியர் திருத்தங்கள் செய்து அனுப்பினார். 2015 மார்ச் மாதம் திருத்தங்கள் செய்து அனுப்பும்போது, இந்திய அளவில் ஏற்பட்ட மாற்றங்களை, குறிப்பாக தமிழகத்தின் நிலையைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அப்போது தப்பிப் போயிற்று. 2015இல் அனுப்பிய ப்ரூஃப் நேற்றுதான் திரும்ப வந்திருக்கிறது. அதில் கண்ட மேலும் பல திருத்தங்களின் மூலம், ஓராண்டுக்குள் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது எனத் தெரிய வந்தது. எனவே சுருக்கமாக, இந்தப்பதிவு.


இந்திய அளவில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு தென்பகுதியில் குறைந்து கொண்டே போகிறது.
நாட்டின் வடமாநிலங்களோ, தென் மாநிலங்களோ தொழில்துறை வளர்ச்சியடைந்த மாநிலங்களில்தான் நிலைமை மோசமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, வடக்கே குஜராத், தெற்கே தமிழ்நாடு.
• 2009 - 2011 புள்ளிவிவரங்களுக்கு இடையில் பார்த்தால், நிலத்தடி நீர்மட்டத்தில் முன்னேற்றமும் குறைந்திருக்கிறது. 2009இல் தமிழ்நாட்டில் 80 சதவிகிதமாக இருந்தது இப்போது 77 சதவிகிதம். புதுச்சேரியில் 98 விழுக்காடாக இருந்தது, இப்போது 90 விழுக்காடு. மழைநீர் அளவும் குறைந்துவருகிறது.

2011 புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு தாலூகாக்களில் நிலத்தடி நீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அவற்றில், பாதிப்பு அற்றவை, சற்றே பாதிப்படைந்தவை, பாதிப்படைந்தவை, மிகவும் பாதிப்படைந்தவை, உப்புநீர்த்தன்மை பெற்றவை என்ற ஒரு பட்டியல் இருக்கிறது. அதிலிருந்து உதாரணத்துக்காக சில மாநிலங்களின் விவரங்களைக் கீழே தருகிறேன். தொழில்துறையில் முன்னேறியவை, வட மாநிலங்கள், தென் மாநிலங்கள், மழைவாய்ப்பு அதிகம் உள்ளவை, தொழில்துறை வளர்ச்சி இல்லாத வடகிழக்கு மாநிலங்கள் என தேர்ந்தெடுத்த பட்டியல் இது.

மாநிலம்
சோதித்தவை
பாதிப்பு அற்றவை
சற்றே பாதிப்பு
பாதிப்பு
மிகவும் பாதிப்பு
உப்புநீர் ஆனது
ஆந்திரா
1110
877
97
15
83
38
அருணாசல்
11
11
0
0
0
0
பீகார்
533
522
11
0
0
0
குஜராத்
223
171
13
5
24
10
கர்நாடகா
270
152
34
21
63
0
ம.பி.
313
70
21
1
8
0
மகாரா.
353
325
16
2
10
0
மிசோ
22
22
0
0
0
0
ஒடிஷா
314
308
0
0
0
6
ராஜஸ்.
243
25
20
24
172
2
தமிழ்நாடு
1129
437
235
48
374
35
திரிபுரா
39
39
0
0
0
0
உ.பி.
820
68
10
8
111
0

மேற்கண்ட அட்டவணையிலிருந்து, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு உவர்ப்புத்தன்மை அதிகரித்துள்ளது, இதில் மிக மோசமானது தமிழகம்தான் என்பதை அறியலாம்.

மிகவும் பாதிக்கப்பட்டவை என்ற வரிசையில், ராஜஸ்தான் முதலிடம் பெறுகிறது. பாலைவனப்பகுதி என்பதால், பரிசோதிக்கப்பட்ட 243இல் 172 இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதிலும் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம் உண்டு. பரிசோதிக்கப்பட்ட 1129 இடங்களில் 374 இடங்கள் அதாவது, 33 விழுக்காடு அதிகம் பாதிக்கப்பட்டவை.

பரிசோதிக்கப்பட்டவற்றில் பாதிப்பு இல்லாத பாதுகாப்பான நிலத்தடி நீர் என்ற வகையில் தமிழ்நாட்டில் மிக மோசமான நிலை உள்ளது. (தமிழ்நாட்டில் 39 விழுக்காடு, ஆந்திரத்தில் 79 விழுக்காடு, குஜராத் 77 விழுக்காடு, ஹரியாணா 20 விழுக்காடு).

இன்னும் பல விவரங்களையும் சேர்த்து பதிவை நீட்ட விரும்பவில்லை. தமிழகத்துக்கு வரும் நதி நீர்ப் பிரச்சினைகள் எப்போதும் இருக்கின்றன. அத்துடன் மழை அளவும் குறைந்து வருகிறது. எனவே நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாகச் சுரண்டாமலும், இருக்கிற நிலத்தடி நீரைப் பாதுகாப்பதோடு அதை மேம்படுத்தவுமான கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது. மணல்கொள்ளை, காடுகள்-மலைகளை அழித்தல், ஏரிகள்-குளங்களை பராமரித்தல், ஏரிகுளங்களிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழைநீர் சேகரிப்பு, தொலைநோக்குத் திட்டங்கள் என பல விஷயங்களோடு தொடர்புடைய பிரச்சினை இது.


தமிழகத்தில் தேர்தல் வர இருக்கிறது. நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்போம், மேம்படுத்துவோம் என்று உறுதியளிக்கிற கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்று உறுதியெடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத் தலைமுறைக்கு துரோகம் செய்தவர்களாவோம்.